தீ வைப்பு விவகாரத்தில் திடீர் திருப்புமுனை - நானேதான் தீ வச்சிகிட்டேன்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்...
திருப்பத்தூர் அருகே 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் கோவிந்தன், தனக்கு தானே தீ வைத்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஜோன்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றான்.
கோவிந்தனின் அம்மா மற்றும் அப்பா இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்ததால் இருவரும் பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். கோவிந்தன் அம்மா வழி பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் மாணவன் கோவிந்தன் சிறப்பு வகுப்பிற்காக சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் மாணவனை கடத்திச் சென்றதாகவும் அவர்கள் மாணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு வேலூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மாணவன் கோவிந்தன், தனக்கு தானே தீ வைத்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சக மாணவனின் பர்சை திருடிய கோவிந்தனை ஆசிரியர் கண்டித்ததால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.