துணை வேந்தர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கையோடு டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி ..
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணிக்கு திடீர் பயணமாக டெல்லி சென்றார்.
தில்லி செல்லும் அவர் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் இந்த வார இறுதியில் அவர் சென்னை திரும்பலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி சட்டப்பேரவையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாக்களில், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
மேலும் படிக்க:இபிஎஸ்க்கு சி.எம் பதவியை முன்பே ஜெயலலிதா கொடுத்திருந்தால்..! என்ன நடந்திருக்கும் தெரியுமா...? கோவை செல்வராஜ்
மேலும் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் விளக்கமளித்தார். இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மசோதா குறித்து தமிழக அரசின் தலைமைசெயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களை கோரி கடிதம் எழுதியிருந்தார். அதில் 'துணைவேந்தர்களை அரசே நியமிப்பது என்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது என்றும் அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திடீர் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். அங்கு குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க:துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவிற்கு எதிர்ப்பு.. சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கடிதம்..