தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு நிதி விடுவிக்க மறுத்துள்ளது. ஆளுநர் ரவி, இருமொழிக் கொள்கையால் இளைஞர்கள் வாய்ப்புகளை இழப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு- தமிழக அரசு எதிர்ப்பு
தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக இரு மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை ஆட்சியில் இருந்து திமுக மற்றும் அதிமுக இந்திக்கு எதிராகவே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதனிடையே மத்திய அரசு புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் தமிழக அரசும் இந்தியை ஏற்கமுடியாது என தெரிவித்து விட்டது. இதனையடுத்து மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடியை விடுவிக்க மறுத்துவிட்டது. இதனால் ஆசிரியர்களுக்கு சம்பளமும், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்க முடியாத நிலை நீடித்து வருகிறது.

மும்மொழி கொள்கை அனுமதி இல்லை
மேலும் 10ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழியை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழக ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள செய்தியில், தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன். ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது.
தமிழகம் பின்தங்கியுள்ளது.
இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக,

தமிழக இளைஞர்கள் வாய்ப்பை இழந்துள்ளனர்
தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
