பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து படம் எடுத்த பள்ளி ஆசிரியர் கைது!
அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றும் ஒருவரின் செல்போனில் ஆபாச படங்கள் இருந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆசிரியரின் இந்த தவறான செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம், பணகுடி நதிப்பாறையைச் சேர்ந்தவர் ரமேஷ். அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றும் அந்தோணி சாமி என்பவர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், பொது இடத்தில் குளிக்கும் பெண்களை ஆபாச படம் எடுப்பதாக அந்தோணி சாமி மீது குற்றம் கூறியிருந்தார். ரமேஷின் புகாரை அடுத்து,
ஆசிரியர் அந்தோணி சாமியை போலீசார் விசாரணை செய்தனர். மேலும், அவரிடம் இருந்த செல்போனையும் ஆய்வு செய்தனர். செல்போனை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அந்தோணி சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கடந்த 2014 ஆம் ஆண்டு, பணகுடியில் உள்ள ஒரு பள்ளியில் அந்தோணிசாமி தமிழாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்போது பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாகவும், அந்தச் சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை.
மேலும், வீடியோவில் உள்ள மாணவிகளின் நலன்கருதி அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று, 2015-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அந்தோணிசாமிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அங்கிருந்து, பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல்மூலம் வந்துள்ளார்.
அதன்பிறகு, பொது இடங்களில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து, செல்போனில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தோணிசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைபார்த்த நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கைதான அந்தோணிக்குத் திருமணமாகி குழந்தையும் உள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.