டாஸ்மாக் லாரி வெடிகுண்டு விவகாரத்தில் ஒருவர் கைது - போலீஸ் அதிரடி...
திருவாரூரில் வெடிகுண்டு எடுக்கப்பட்ட சம்பவத்தில் எண்ணூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் விளமல் பகுதியில் அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகிறது. லாரிகள் மூலம் அரசு மதுபான கடைகளுக்கு மதுபாட்டில்கள் இறக்குவது வழக்கம்.
அதன்படி விளமல் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு இறக்குவதற்காக லாரியில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் செல்லப்பட்டது.
சரக்கை இறக்கிக் கொண்டிருந்த போது லாரியில் வெடிகுண்டு இருப்பதை கண்டு மதுபான கடையில் வேலை செய்யும் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியுடன் வந்த மோகன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வெடிகுண்டு எடுக்கப்பட்ட சம்பவத்தில் கார் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. இந்த கார் தற்போது யாருடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சித்தாலபாக்கம் பகுதியை சேர்ந்த ரவி என்பவருடைய கார் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது இதுதொடர்பாக எண்ணூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்மீது பல மோசடி வழக்குகள் ஏற்கனவே பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.