அரசு வழங்கும் சலுகைகளை அதிகாரிகள் எங்களிடம் தெரிவிப்பதில்லை – விவசாயிகள் கவலை…
திண்டுக்கல்
திண்டுக்கல்லில், அரசு வழங்கும் சலுகைகளை அதிகாரியகள் எங்களிடம் தெரிவிப்பதில்லை என்று விவசாயிகள், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது.
இந்த அலுவலகம் மூலம்தான், “விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், இடுபொருட்கள், சொட்டுநீர் பாசனம் அமைத்தல், விவசாய கருவிகள்” உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு சாகுபடி செய்யப்படும் பயிர்கள் குறித்த பயிற்சியும் இங்குதான் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நல்லமனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் முறையாக கிடைப்பதில்லை என்றும், மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து முறையாக அதிகாரிகள் தகவல் தெரிவிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
“அரசு சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை அலுவலர்கள் தெரிவிக்காததைக் கண்டித்து நல்லமனார்கோட்டை விவசாயிகள் நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
விவசாயிகள், அரசின் சலுகைகள் அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக கிடைப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து முறையாக தகவல்கள் தெரிவிப்பதில்லை என்று புகார் அளித்தனர்.
அதனைக் கேட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள், “இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.