கல்வி உதவித்தொகை கிடைக்காததால் அரசு கல்லூரி மாணவ - மாணவிகள் ஆர்ப்பாட்டம்...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில், கல்வி உதவித் தொகை வழங்காததால் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அன்பரசு முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், "இதுவரை எங்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் கல்லூரி படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முடியப்போகிறது.
எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து விரைவில் கல்வி உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்கிறோம்" என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான மாணவ - மாணவிகள் தங்கள்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.