இறந்தவர் உடலுடன் 3 மணி நேரம் சுற்றிய அரசு பேருந்து...
அரசு பேருந்துவில் பயணம் செய்த ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்தார். இறந்தவர் உடலுடனும் மற்ற பயணிகளுடனும் பேருந்து சுமார் 3 மணி நேரமாக சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. அந்த பேருந்தில் மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் பயணம் செய்தார்.
பேருந்து இரவு 12 மணியளவில் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது முருகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
பயணி ஒருவர் உயிரிழந்ததால் செய்வதறியாமல், பேருந்து, ஒட்டன்சந்திரம் பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர்கள், போலீசுக்கு செல்லுங்கள் என்று கூறியதை அடுத்து, ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையம் சென்று தகவல் தெரிவித்துள்ளனர்.
பயணி முருகன் உயிரிழந்தது, அம்பிளிக்கை இடம் என்பதால், அந்த காவல் நிலைய போலீசார் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அம்பிளிக்கை போலீசார் வரும் வரையில் இறந்து போன முருகனின் உடலுடன் பேருந்துவில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், பயணிகள் 35 பேரும் காத்திருந்தனர்.
பின்னர் அம்பிளிக்கை போலீசார் வந்த பிறகு, சடலத்தைக் கைப்பற்றி, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.
சுமார் 3 மணி நேரமாக இறந்த உடலுடன் சுற்றிய பேருந்து அதிகாலை 3 மணியளவில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை புறப்பட்டது. பயணி முருகன் இறந்தது குறித்து அவரது வீட்டாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மூன்று மணி நேரமாக இறந்தவர் உடலுடன் பேருந்து சுற்றியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.