government bus hits and killed North indians who went in vehicle
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் அரசு பேருந்து மோதி மொபைட்டில் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயத்தோடு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம், இந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோனு குமார் (24), அரவிந்த் கேவிட் (50), கமலேஷ் கேவாட் (30). இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் வேலூர் மாவட்டம், சூலூரை அடுத்த அரசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் மதியம் ஒரே மொபட்டில் தென்னம்பாளையம் சென்று காய்கறி வாங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் அரசூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மொபட் மீது அந்த வழியாக வந்த அரசு பேருந்து படுவேகமாக மோதியது. மொபட் மீது பேருந்து மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி தூள் தூளாக உடைந்தது. இந்த விபத்தில் மொபட்டில் வந்த மூவரும் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சோனு குமார் மற்றும் அரவிந்த் கேவிட் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கமலேஷ் கேவாட் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சூலூர் காவலாளர்கள், அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
