government announced relief fund for farmers
உழவர் பாதுகாப்புத் திட்ட விவசாயிகள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் 2011-ம் ஆண்டு ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தி செயலாக்கத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்தின்கீழ் விவசாய உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இயற்கை மரணம் எய்தினால், அவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் உதவித்தொகையை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
