அரசுக்கு மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்குவதில் நெருக்கடி இருந்தாலும் நீதித்துறைக்கு உடனடியாக நிதிகள் ஒதுக்குகிறது – நீதிபதி புகழாரம்…
விழுப்புரம்
தமிழக அரசால் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதில் நெருக்கடி இருந்தாலும் நீதித்துறைக்கு மட்டும் உடனடியாக நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமமோகனராவ் தமிழக அரசை புகழ்ந்து தள்ளினார் தெரிவித்தார்..
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நீதிமன்றத்தின் திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினிதேவி தலைமை வகித்தார். ஆட்சியர் சுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமமோகனராவ் பங்கேற்று கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கும் ஏற்றிவைத்தார்.
இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், “நீதித்துறை கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து அதனை நிறைவேற்றி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
தற்போது சங்கராபுரம், வானூர் ஆகிய பகுதிகளில் நீதிமன்ற கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நீதித்துறைக்கு தேவையான கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தார்.
கடந்த ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நீதித் துறைக்கு மட்டும் ரூ.636 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு பங்கு ரூ.156 கோடி மட்டுமே. மீதித்தொகை முழுவதும் மாநில அரசின் நிதியாகும்.
பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதில் நெருக்கடி இருந்தாலும் நீதித்துறைக்கு மட்டும் உடனடியாக நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் 196 நீதிமன்றங்கள் கட்ட நிதிஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.
இதில், பார் அசோசியேஷன் சங்க உறுப்பினர் கதிரவன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜாராம், செயலாளர் வேலவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவின் இறுதியில் தலைமை குற்றவியல் நீதிபதி அருணாசலம் நன்றித் தெரிவித்தார்.