தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,12,675 போக்குவரத்துக் ஊழியர்களுக்கு ரூ. 6 கோடியே 75 லட்சத்து 73 ஆயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க;- விரைவில் தமிழ்நாட்டில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள்! அறிவிப்பு எப்போது?

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. 

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம். பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில், 2023-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் "சாதனை ஊக்கத் தொகை" வழங்கப்படும்.

இதையும் படிங்க;- சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுமா.? கிளாம்பாக்கமா.? விளக்கம் கொடுத்த போக்குவரத்து கழகம்

இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.