துப்பாக்கி சூடு தவறில்லையாம்! நியாமில்லாமல் பேசாதீர்கள்! ஜெயக்குமாரை பொரிந்து தள்ளிய ஜி.கே.வாசன்...
தஞ்சாவூர்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது நியாயமற்றது. மனிதாபிமானமற்றது என்று தஞ்சையில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கூடிய கட்டாய சூழல் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைக்காக போராடிய தூத்துக்குடி மக்களுக்கு செவி சாய்க்க தமிழக அரசு தவறிவிட்டது. இந்த முக்கிய பிரச்சனையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியாக இல்லை.
ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியவர்களிடம் கலந்து பேசி தீர்வு ஏற்படுத்தாமல், போராடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய செயல் அல்ல.
100-வது நாள் போராட்டத்தின் தாக்கம் என்ன? முக்கியத்துவம் என்ன? என்பதை அறிந்து புரிந்து தமிழக அரசும், காவல் துறையும் செயல்படவில்லை.
மிக சுலபமாக மக்களை கையாண்டு விடலாம் என்று நினைத்தது அராஜகபோக்கு. காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தவறியதால் துப்பாக்கி சூடு நடைபெற்று அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
காவலாளர்களின் அவசரபோக்கு, பொறுமை இழந்த செயல்பாடு, தமிழக அரசின் அடக்குமுறை பாணி இனிமேல் மக்கள் மத்தியில் எடுபடாது.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 இலட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக கொடுக்க வேண்டும்.
தங்களது கோட்பாடுகளை மதிக்காமல், அதை மீறி செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை நிலையை உடனடியாக மக்கள் தெரிந்து கொள்ள நீதி விசாரணை அவசியம் தேவை.
தமிழக அரசு இந்த சம்பவத்தை நியாயப்படுத்த நினைத்தால் மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய அரசு என்பதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இது மக்களை அலட்சியப்படுத்தும் போக்கு.
காவல் துறையினர் பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற பல போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை காவலாளர்கள் புதிதாக சந்திக்கவில்லை.
ஆட்சியர் அலுவலகம் வரை போராட்டக்காரர்களை அனுமதித்திருக்க வேண்டியதில்லை. முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தி இருக்கலாம். துப்பாக்கி சூடு நடத்தியது அவசியமற்றது.
துப்பாக்கி சூடு தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது நியாயமற்றது. மனிதாபிமானமற்றது" என்று அவர் கூறினார்.