காதலை ஏற்க மறுத்த 10-ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி தப்பிச் சென்ற கல்லூரி மாணவர் காவளாரகளால் கைது செய்யப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள இராஜகோபாலன் பட்டியைச் சேர்ந்த கூலிதொழிலாளி வேல்முருகன் மற்றும் அமுதாவின் மகள் புவனேஸ்வரி. இவரது தந்தை வேல்முருகன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயின் அரவணைப்பில் வளார்ந்து வரும் புவனேஸ்வரி ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் நவீன். இவர், தேனியில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் புவனேஸ்வரியை, தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், புவனேஸ்வரியோ இவர் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்தார் நவீன்.

பின்னர், புவனேஸ்வரியின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்தினார் இதில் மாணவி பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து புவனேஸ்வரியின் தாயார் அமுதா, ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நவீன் மீது வழக்கு பதிவு செய்தனர் ஆண்டிபட்டி காவல்துறையினர்.

தொடர்ச்சியாக, தப்பியோடிய கல்லூரி மாணவர் நவீனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மதியம் ஆண்டிபட்டியருகே சாஸ்தா கோவில் பகுதியில் சுற்றி திரிந்த மாணவர் நவீனை ஆண்டிபட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் நவீனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் மாணவனுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயதில், பள்ளி மாணவியை கத்தியால் குத்தி விட்டு இன்று குற்றவாளியாக இருக்கிறார் நவீன். இதற்கு நவீனின் பெற்றோர், முறையாக வளர்க்காததே காரணமாக இருக்கக் கூடும். இப்படி ஒரு காரியத்தை செய்தவனுக்கே சட்டத்தின்படி தண்டனை கிடைத்தே ஆகவேண்டும் என்று அங்கிருந்த மக்கள் பேசிக்கொண்டனர்.

இந்த சம்பவத்தால் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.