சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே அச்சாணியை சேர்ந்த எஸ்.ரமேஷ்குமார், என்பவர் உயர்நீமன்றம் மதுரை கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

‘‘நெல்லை மாவட்டம், சேர்தாமரத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற பலருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில், சேர்தாமரத்தைச் சேர்ந்த மாரியம்மாள் (69), லட்சுமி (61) உட்பட 7 பேரின் கண் பார்வை பறிபோனது. இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர், பார்வை இழந்த 7 பேருக்கும் தலா ரூ.3 லட்சத்தை அரசு சார்பில் வழங்கவேண்டும். இந்த இழப்பீட்டை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இதேபோல் யாராவது பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருந்தால் அவர்களின் சட்ட பூர்வ வாரிசுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டனர். 

மேலும் நீதிபதிகள் கூறுகையில், ஏழைகளின் நியாயமான கோரிக்கையை அரசும் கவனிப்பதில்லை. வறுமை, காலதாமதம், கல்வியறிவு இல்லாதது போன்ற போன்ற காரணங்களால், ஏழை மக்கள் நீதிமன்றத்துக்கு வரமுடியாமல் போகிறது.

மக்கள் தங்களை நாடி வந்து நீதி பெறவேண்டும் என்பதைத் தாண்டி, தங்கத்தட்டில் நீதியை ஏந்திக் கொண்டு குடிசைக்கே சென்று உதவ வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு உள்ளது. இந்த நீதிமன்றமும் ஏழைகளின் குடிசையை நோக்கி நீதியை கொண்டு செல்கிறது என கூறினர்.