இன்று முதல் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் - ஆட்சியர் அறிவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி...
தஞ்சாவூர்
இன்று முதல் பொய்கைகுடி தடுப்பணையில் இருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், செங்கிப்பட்டி பகுதிகளில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் தண்ணீரை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆனால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இந்த வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் கடந்த 25-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரசு கட்சியினர் பங்கேற்றனர்.
இவர்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 27-ஆம் தேதி ஆட்சியரை நேரில் சந்தித்து பேசி முடிவு செய்யலாம் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனால், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்படி, நேற்று தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்களை அழைத்து ஆட்சியர் அண்ணாதுரை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், "நாளை (அதாவது இன்று) மாலை முதல் பொய்கைகுடி தடுப்பணையில் இருந்துபுதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும். மேட்டூர் அணை மூடப்படும் வரை தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும்" என்று உறுதியளித்தார். இதனை விவசாயிகள் ஏற்றுக் கொண்டதால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது.