குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தும் அழகப்பா பல்கலைக்கழகம் - பதிவாளர் அறிவிப்பு...
சிவகங்கை
குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த அழகப்பா பல்கலைக்கழகம் ஏற்பாடுகள் செய்துள்ளது என்று அதன் பதிவாளர் அறிவித்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்தச் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு தேர்வாணையம் வரும் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ல் நடத்தவிருக்கும் குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலமாக இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் நவம்பர் 25-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
லெ.சித. லெ. பழனியப்பச் செட்டியார் நினைவரங்கத்தின் தரைத்தளத்தில் நடத்தப்பட உள்ள இதில் பங்கேற்க விரும்புவோர் பழனியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டத்திற்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.