free Laptops have been provided for Rs 91 crore in Ramanathapuram - Collector Notice

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 62 ஆயிரத்து 338 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 91.24 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2011 - 2012-ஆம் நிதியாண்டில் 10 ஆயிரத்து 298 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14.35 கோடி மதிப்பிலும், 2012 - 2013-ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 205 பேருக்கு ரூ.17.13 கோடியிலும், 2013 - 2014-ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 347 பேருக்கு ரூ.17.06 கோடியிலும், 2014 - 2015-ஆம் நிதியாண்டில் 10 ஆயிரத்து 413 பேருக்கு ரூ.14.75 கோடியிலும் விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 - 2016-ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 297 பேருக்கு ரூ.14.59 கோடியிலும், 2016 - 2017-ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 778 பேருக்கு ரூ.13.36 கோடி மதிப்பிலும் விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 338 மாணவ, மாணவிகளுக்கு ரூ.91.24 கோடி மதிப்பில் விலையில்லா மடிகணினிக்கள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் விலையில்லா பாடநூல்கள் 10 இலட்சத்து 95 ஆயிரத்து 513 பேருக்கும், பாட நோட்டுக்கள் 85 இலட்சத்து 53 ஆயிரத்து 64 பேருக்கும், புத்தகப் பைகள் 2 இலட்சத்து 52 ஆயிரத்து 151 பேருக்கும், வண்ணச் சீருடைகள் 4 இலட்சத்து 46 ஆயிரத்து 139 பேருக்கும் வழங்கியிருக்கிறோம்.

காலணிகள் 2 இலட்சத்து 26 ஆயிரத்து 295 பேருக்கும், கணித உபகரணப் பெட்டிகள் 1 இலட்சத்து 47 ஆயிரத்து 502 பேருக்கும், புவியியல் வரைபட நூல்கள் 2 இலட்சத்து 38 ஆயிரத்து 970 பேருக்கும், இலவசப் பேருந்து பயண அட்டைகள் 1 இலட்சத்து 99 ஆயிரத்து 751 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலும் மாணவ, மாணவிகள் படிப்பில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற எண்ணத்திலும் கடந்த ஆறு ஆண்டுகளில் விலையில்லா மடிகணினிகள் மட்டும் ரூ.91.24 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.