“இளைஞர்கள் முடியாது என்கிற வார்த்தையை தவிர்க்க வேண்டும். நம்மால் முடியாதது பிறகு யாரால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காரைக்குடியில் கவிஞர் அருசோ வாழ்க்கைப் பயணம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

“கவிஞர் அருசோ 106 நூல்களை எழுதியுள்ளார். நல்ல ஆசிரியருக்கு அடையாளமாக கவிஞர் அருசோவும், நல்ல மாணவருக்கு அடையாளமாக அவரிடம் பயின்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகமும் திகழ்கிறார்கள்.

நாள்தோறும் கற்றுக் கொண்டே இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியும் என்றார்.

இந்த விழாவில் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம், “அருசோ வாழ்க்கைப் பயணம்” என்ற நூலை வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது:

“எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் பலர் உண்டு. அவர்களில் மிகமிகப் பிடித்தவர் அருசோதான். எனது ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதால்தான் அவரின் இந்த முத்து விழாவிற்கு தில்லியிலிருந்து வந்துள்ளேன்.

அன்புடன் கலந்த அறிவுதான் நல்ல அறிவு. அன்பில்லாத அறிவு தேவையற்றது. நாம் பெற்ற அறிவினால் பிறருக்கு உதவி செய்யவேண்டும்.

இளைஞர்கள் முடியாது என்கிற வார்த்தையை தவிர்க்க வேண்டும். நம்மால் முடியாதது பிறகு யாரால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார்.

இந்த விழாவில் அருட்கவிஞர் அருசோமசுந்தரம் அறக்கட்டளையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நீதிபதி கற்பகவிநாயகம் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

கவிஞர் அருசோ பெயரிலான இணையதளமும் தொடக்கி வைக்கப்பட்டது. விழாவில் செட்டிநாடு சிமிண்ட் இயக்குநர் பாகனேரி ராஜாமணி முத்துகணேசன் வாழ்த்திப் பேசினார். கவிஞர் அருசோ ஏற்புரையாற்றினார்.

சிவகங்கை மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் பேராசிரியர் அய்க்கண், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தாளாளர் சேவு.அ. லெட்சுமணன் செட்டியார், காரைக்குடி கம்பன் கழக செயலாளர் பழ. பழனியப்பன் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் கரு. முத்தையா, கவிஞர் அப்பச்சி சபாபதி ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

முன்னதாக விழா அமைப்பாளர் ஏ.எல்.சிதம்பரம் வரவேற்றுப் பேசினார். முடிவில் அலமேலு அருணாசலம் நன்றி கூறினார்.