forest people went temple with police for praise
நீலகிரி
நீலகிரியில் ஆதிவாசி மக்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் கோவிலுக்குள் வழிபாடு நடத்த போராட்டம் நடத்தி அனுமதி பெற்று பலத்த காவல் பாதுகாப்புடன் சென்று வழிபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் உள்ள அள்ளூர்வயல், கோடமூலா கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள தனியார் எஸ்டேட்டுக்குள் ஆதிவாசி மக்கள் வழிபடும் பொம்மதேவர், சிவன், கெலவத்து மாரியம்மன், பரதேவதைகளின் கோவில்கள் உள்ளன.
இந்த நிலையில், கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு எஸ்டேட் நிர்வாகம் அனுமதி மறுத்ததால் நேற்று முன்தினம் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆதிவாசி மக்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்விடத்துக்கு வந்த காவலாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இருவருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் ஆதிவாசி மக்களை காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர், மாலையில் அவர்கள் அனைவரும் விடுக்கப்பட்டனர்.
இதனையடுத்து தனியார் எஸ்டேட்டுக்குள் இருக்கும் ஆதிவாசி மக்களின் கோவிலுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் எஸ்டேட்டுக்குள் உள்ள கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாட ஆதிவாசி மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் எஸ்டேட் சாலை வழியாக ஆதிவாசி மக்கள் நடந்து கோவிலுக்குச் சென்றனர்.
அங்கு காவல் பாதுகாப்புடன் இரவு தொடங்கி நேற்று மாலை வரை பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தவாறு மகா சிவராத்திரி விழாவை ஆதிவாசி மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.
சாமியின் அருள்வாக்கு, ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் இந்த விழாவின்போது நடைபெற்றன. மேலும், அவர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
பின்னர, அங்கேயே வழங்கப்பட்ட அன்னதானத்திலும் ஆதிவாசி மக்கள் பங்கேற்று உணவு சாப்பிட்டு சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடியதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
