முதலில் ‘ஐயமிட்டு உண்’; இப்போது ‘ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு’ சென்னையில் கலக்கும் பெண் டாக்டர்
ஆதரவற்றோர்களுக்கு உதவ, பசியோடு இருப்பவர்களுக்கு பசியாற்ற
சென்னை பெசன்ட் நகரில் ஏற்கனவே ‘ஐயமிட்டு உண்’ என்ற சமுதாயபிரிட்ஜ் தொடங்கப்பட்ட நிலையில், இப்போது ஆயிரம் குடும்பங்கள் பசியாற உதவ பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
‘ஐயமிட்டு உண்’ திட்டத்தை நிறுவியவரான பல் அறுவை சிகிச்சை நிபுனரான டாக்டர் இசா பாத்திமா இப்போது ‘ஹேப்பிபிளேட்சென்னை’(#happyplatechennai) என்ற புதிய திட்டத்தையும் தொடங்கியுள்ளார்.
ஐயமிட்டு உண் என்ற சமுதாய பிரிட்ஜ் பெசன்ட் டென்னிஸ் கிளப் அருகே அமைக்கப்பட்டுள்ளது. உதவ நினைக்கும் மக்கள் தங்களிடம் இருக்கும் உணவுகள், பழங்கள், பிஸ்கெட், குடிநீர் பாட்டில், ஆடைகள் என எது வேண்டுமானாலும், அந்த பிரிட்ஜில் வைத்துச் செல்லலாம். தேவை உள்ளவர்கள் யாரையும் கேட்காமல் அந்த பிரிட்ஜை திறந்து எடுத்துக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தபிரிட்ஜ் திறந்திருக்கும்.
உணவுகளை வீணடிக் கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இம்மாதத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு அளிக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உணவுகளை வீணாக்காதீர்கள் என்ற விழிப்புணவு பிரசாரம் இந்த மாதம் முழுவதும் செய்யப்பட உள்ளது.
இது குறித்து டாக்டர் இசா பாத்திமா கூறுகையில், “ உலக உணவு நாளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்காக மக்கள் தங்கள் சாப்பிட்டு முடித்தபின் காலியான தட்டுகளை பேஸ்புக்கில் போஸ்ட் செய்து, உணவுகளை வீணாக்கவில்லை என்று தெரிவிக்கலாம். அதுமட்டுமல்லாமல், உணவுகளை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கும் விரும்புபவர்களும் வழங்கலாம்.
இந்த மாதத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு வழங்கலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். இந்த பிரசாரத்தின் மூலம் உணவுகளை தானமாக வழங்குவோர் வழங்கலாம். இந்த திட்டத்தில் மிகவும் சீக்கிரமாக கெட்டுப் போகக்கூடிய உணவுகளை வழங்காமல், இருப்பது அவசியமாகும். அதாவது அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் தீபாவளி பண்டிகை என்பதால், இனிப்புகள் போன்றவற்றை வழங்கலாம்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களையும், பகுதிகளையும் அடையாளம் கண்டு இருக்கிறோம். அந்த பகுதிகளை வரும் 15-ந் தேதிக்குள் இறுதிபட்டியலிட்டு, எங்கள் அமைப்பு மூலம் உரியவர்களுக்கு உணவுகளை அளிப்போம். நாங்கள் தேர்வு செய்யும் பகுதி, இதற்கு முன் எந்த அமைப்பும் அந்த இடங்களுக்கு செல்லாத இடமாக இருக்கும்.
தீபாவளிப் பண்டிகை வரும் நேரத்தில் ஏழை மக்கள் பலர் கையிலும் செலவுக்கும், நல்ல உணவுகள் வாங்க பணமும் இருக்காது. இந்த நேரத்தில் அவர்களைச் சந்தித்து உணவு வாங்க நாங்கள் உதவி செய்வோம். அதே சமயம், உணவுகளை வீணாக்காதீர்கள் என்ற பிரசாரத்தையும் முன்னெடுப்போம்.
ஐயமிட்டு உண் சமுதாய பிர்ட்ஜுக்கு மக்கள் அளித்த ஆதரவைப் போல் இந்த திட்டத்துக்கும் அமோகமாக ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.