சேலம், ஓசூர், நெய்வேலிக்கு இனி ஃபிளைட்ல போகலாம்….மத்திய மாநில அரசுகள் ஒப்பந்தம்…
தமிழகத்தில் ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் விமானச் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள அத்திய மாநில அரசுகள், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் விமான சேவைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே உள்ள விமான ஓடுதளங்கள் மற்றும் விமான நிலையங்களை மேம்படுத்தவும், நாட்டில் பயன்பாட்டில் இல்லாத மற்றும் குறைவான பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்காக, தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையை கடந்த ஆண்டு வெளியிட்டது.
இதையடுத்து மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்து இணைப்புத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்படி தமிழகத்தில் முதற்கட்டமாக ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் இத்திட்டத்தின் கீழ் விமானச் சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.