தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் சூசையா. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழிலாளராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் சூசையா, மீன்பிடி துறைமுகத்தின் உள்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சிலர், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மீன்பிடி துறைமுகம் நிர்வாகம் மற்றும் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைதொடர்ந்து, சூசையாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்பிடி தொழிலாளர்களை வெளியில் இருந்து வந்து மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் விசைப்படகு தொழிலாளர்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, புகார் மனு கொடுத்தனர்.
