முதலில் முறையான சாலைகளை போடுங்கள்; பிறகு அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்கலாம் – வலுக்கும் எதிர்ப்புகள்…
மதுரை
குண்டும் குழியுமான சாலைகள சரிசெய்து முறையான சாலைகளை அரசு போடட்டும் பிறகு அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கட்டும் என்று கட்டாய அசல் ஓட்டுநர் உரிமம் என்ற அரசின் உத்தரவிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 1 (இன்று) முதல் வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கு மக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு அலைகள் வீசுகிறது.
மதுரை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சாத்தையா கூறியது:
“வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஓட்டுனர் உரிமத்தின் நகல் பிரதிகளை மட்டுமே வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா என அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைனுக்கு மாற்றி வரும் வேளையில் தமிழக அரசு அசல் உரிமம் வேண்டும் என்று சொல்வது தலைகீழாக உள்ளது.
லாரி ஓட்டுனர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். அப்போது ஓட்டுனர் உரிமம் தொலைந்துப் போனால் திரும்ப பெறுவது சிரமம்.
எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட லெனின் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பாஸ்கர் கூறியது:
“வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். ஓட்டுனர் உரிமம் தொலைந்து போகும் பட்சத்தில், மீண்டும் அதனைப் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அலைய வேண்டும்.
மேலும், ஓட்டுனர் உரிமம் அசலா? என்பதை கண்டறிவதற்கான எந்த நவீன தொழில்நுட்ப வசதிகளும் காவலாளர்களிடம் கிடையாது. முதலில் சாலைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, ஓட்டுனர் உரிமங்களையும் ஆன்லைனில் பிரதி எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்” என்று அவர் கூறினார்.