ஒரே நாளில் 14 வாகனங்களுக்கு அபராதம்; விதிகளை மீறி இயக்கியதால் போக்குவரத்து துறை அதிரடி...
பெரம்பலூர்
பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், போக்குவரத்து துறையினர் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு பெரம்பலூர் போக்குவரத்து ஆணையர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
அந்த உத்தரவின்பேரில், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) ஜெயதேவ்ராஜ் தலைமையில், இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகச் செயலாக்க வட்டார போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி, துணை போக்குவரத்து ஆணையர் அலுவலக செயலாக்க வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அதன்படி, அந்தக் குழு பெரம்பலூர் மாவட்ட எல்லையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என்று தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதிவேகமாகவும், சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அதிக மக்களை ஏற்றிச் சென்ற இரண்டு வாகன ஓட்டுநர்களின் உரிமத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தணிக்கையின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ் . வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி, பிரபாகரன், முகமதுமீரான் மற்றும் காவலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.