கேட்ட விலைக்கு கோழி தராததால் தகராறு; பெண்ணின் சுடிதாரை கிழித்த திமுக, பாமக நிர்வாகிகளுக்கு கத்தி குத்து...
திருவள்ளூர்
திருவள்ளூரில் கேட்ட விலைக்கு கோழி தராததால் கடைக்கார பெண்ணின் சுடிதாரை கிழித்த திமுக, பாமக கட்சி நிர்வாகிகளுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில், கடைக்கார பெண் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் சோழன் நகரைச் சேர்ந்தவர் மோகன் (24). இவர் தனது நண்பருடன் நேற்று முன்தினம் மதியம் மரணமடைந்த உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கிற்கு கோழி வாங்குவதற்காக ஆவடி புதிய இராணுவ சாலையில் உள்ள முகமது அனிபா மனைவி ஜெயலானி (36) என்பவரின் கடைக்கு வந்தார்.
அப்போது அவர் உயிருடன் நாட்டுக்கோழி வேண்டும் என்று கேட்டார். ஜெயலானி ஒரு கோழி ரூ.570 என கூறினார். பின்னர் ஒரு கோழி ரூ.550 என பேசி முடித்தனர்.
பின்னர் மோகன் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து கோழிக்கு ரூ.500 எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால், ஜெயலானி அந்த விலைக்கு தர முடியாது என்று கூறிவிட்டு கோழியை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று கூறினார்.
இதனையடுத்து மோகனும் அவரது நண்பரும் ஜெயலானியிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து மோகன் அவரது நண்பர்களான தி.மு.க. 12-வது இளைஞர் அணி செயலாளரான பிரபுவேல் (22), பா.ம.க. ஆவடி நகர செயலாளரான கௌரிவேல் (29) உள்பட 7 பேர் காரில் மீண்டும் ஜெயலானி கோழிக்கடைக்கு வந்து அவரிடம் தகராறு செய்தனர்.
அப்போது அவர்கள் ஜெயலானியின் சுடிதாரை பிடித்து கிழித்துவிட்டு கடையில் இருந்த தராசை தூக்கி வீசினர். இதில் ஆத்திரம் அடைந்த ஜெயலானி மற்றும் அவரது கடையில் இருந்தவர்கள் அவர்களுடன் மோதினர்.
அப்போது அவர்கள் தி.மு.க. நிர்வாகியான பிரபுவேல், பா.ம.க. நிர்வாகியான கௌரிவேல் ஆகியோரை கத்தியால் குத்தியனராம். பின்னர் அவர்கள் வந்த கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரில் ஜெயலானி அவரது கடையில் வேலை பார்த்த அசோக் (30), பிலால் (23) ஆகிய மூவரையும் ஆவடி காவலாளர்கள் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அதேபோல ஜெயலானி கொடுத்த புகாரின்பேரில் மோகனை காவலாளர்கள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.