Federal state Congress government demonstration in protest against the Tirupathur
சிவகங்கை
மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளின் போராட்டத்தில் மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என்றும் அதனைக் கண்டித்தும் திருப்பத்தூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டத்தில் செவி சாய்க்காமல் இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திருப்பத்தூர் அண்ணா சிலை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நகர் தலைவர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பழனியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் அபிமன்யு, கணேசன், நெடுமரம் வயிரவன், சேதுசிவராமன், ஜெயச்சந்திரன், நாராயணன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் குழுத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
வட்டார தலைவர்கள் சிங்கம்புணரி ஜெயராம், வீரமணி, திருப்பத்தூர் பன்னீர்செல்வம், ராம்பிரசாத், எஸ்.புதூர் மஞ்சுளாபொன்னா, கல்லல் ஒன்றிய தலைவர் பெருமாள், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிட வேண்டும், மாணவர்களின் கல்விக் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட நிர்வாகிகள் சேவுகன், மகேஸ்வரி, வட்டார தலைவர் ஜெயராஜ், புதுப்பட்டி செல்வம் மற்றும் திருப்பத்தூர், எஸ்.புதூர், சிங்கம்புணரி, கல்லல், கோட்டையூர், பள்ளத்தூர் ஆகிய பகுதிகளை கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் மருதுபாண்டியன் நன்றி தெரிவித்தார்.
