Asianet News TamilAsianet News Tamil

சவரம் செய்யும் கத்தியால் தந்தை கொலை – பாசக்கார மகன் கைது

father murder-son-arrest
Author
First Published Nov 1, 2016, 12:58 AM IST


சவரம் செய்யும் கத்தியால் தந்தையை கொலை செய்த, பாசக்கார மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (50). முடி திருத்தும் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு மேகலா (25) என்ற மகளும், கண்ணன் (27), பிரகாஷ் (22) என்ற மகன்களும் உள்ளனர்.

இதில் மேகலா, கண்ணனுக்கு திருமணமாகி, தனித்தனியாக வசிக்கின்றனர். பிரகாஷுக்கு திருமணம் ஆகவில்லை. தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார்.

இந்நிலையில் தீபாவளியையொட்டி மகள் மேகலா, மகன் கண்ணன் ஆகியோர் குடும்பத்துடன் தந்தை வீட்டுக்கு சென்றனர். அனைவரும் சந்தோஷமாக இருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் திருவிழா நடந்துள்ளது. விழாவையாட்டி சுவாமி ஊர்வலம் நடந்தது. அதிகாலையில், சுவாமி கதிர்வேல் வீட்டின் முன் சுவாமி ஊர்வலம் வந்தது. அப்போது, குடிபோதையில் இருந்த கதிர்வேல், ஊர்வலத்தின் முன்பு குத்தாட்டம் போட்டார்.

இதை பார்த்த பிரகாஷ், தந்தையை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ஆனால், அவர் வரவில்லை. இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ், வீட்டுக்கு சென்று அங்கு சவரம் செய்யும் கத்தியை கொண்டு வந்து தந்தையை மிரட்டி, வீட்டுக்கு அழைத்தார். அதற்கு அவர் மறுத்தார்.

அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், எதிர்பாராதவிதமாக கதிர்வேலின் கழுத்தில் வெட்டு விழுந்தது. இதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து, உத்தரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாஷை கைது செய்தனர்.

தந்தையை மகன்  கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios