காப்பீட்டு தொகை கேட்டு வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்…
கடலூர்
பயிர் காப்பீட்டு தொகை கேட்டு புவனகிரி வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்களுக்கு காப்பீட்டு தொகை செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகி சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட புவனகிரி, ஆதிவராகநத்தம், பு.உடையூர், வடகிருஷ்ணாபுரம், கீழ்புவனகிரி, மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் இதுவரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகளை அணுகி கேட்டதற்கு, அவர்கள் உரிய பதிலும் அளிக்கவில்லை.
இதனால் சினம் கொண்ட விவசாயிகள் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருக்கும் வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த வேளாண்துறை இணை இயக்குனர் இளவரசன், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், “காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதனையேற்ற விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.