பென்னி குவிக் குடும்ப வாரிசுகள் பெரியாறு அணையை பார்வையிட அனுமதி கோரி ஆட்சியரிடத்தில் மனு...
தேனி
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னி குவிக் குடும்ப வாரிசுகள் பெரியாறு அணையை பார்வையிட அனுமதி அளிக்கக் கோரி ஆவணப் பட இயக்குநர் சந்தன பீர் ஒளி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு ஒன்றை அளித்தார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் சந்தன பீர்ஒளி.
இவர், தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று இவர் வந்திருந்தார்.
"தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் முல்லைப் பெரியாறு அணை கட்டிய பொறியாளர் கர்னல் பென்னி குவிக் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுவதை பார்ப்பதற்கு, இலண்டனில் வசித்து வரும் அவரது குடும்ப வாரிசுகளை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதாகவும், அவர்கள் பெரியாறு அணையை பார்வையிடுவதற்கும் அனுமதி அளிக்கக் கோரியும்" ஆட்சியரிடத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், "தேனி மாவட்டத்துக்கு வரும் பென்னி குவிக் குடும்ப வாரிசுகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும், பெரியாறு அணையை பார்வையிடுவதற்கு, அரசிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும்" என்றும் தெரிவித்தார்.