நவீன கருவிகளுடன் கிராம மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது...
தருமபுரி
தருமபுரியில் நவீன கருவிகளுடன் கிராம மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியில் "போலி மருத்துவர்கள் ஒழிப்புக் குழு" என்ற குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இணை இயக்குநர் (நலப் பணிகள்) எம்.கே.பொன்னுராஜ் தலைமையில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கண்காணிப்பாளர் எம்.சசிக்குமார் உள்ளிட்டோர் தருமபுரி அருகேயுள்ள எட்டிமரத்துப்பட்டி கிராமத்தில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, அப்பகுதியில், டி.முத்து என்பவர், எம்.பி.பி.எஸ். மருத்துவம் கல்வி படிக்காமல், கிளினிக் வைத்து நவீன கருவிகளுடன் அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, போலியாக சிகிச்சை அளித்து வந்த டி.முத்து கைது செய்யப்பட்டார். மேலும், அவர் நடத்தி வந்து கிளினிக்குக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுபோன்று மாவட்டத்தில் இயங்கும் போலி மருத்துவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து, மக்களை அவரிடம் காப்பதே தங்களது நோக்கம் என்று இந்த போலி மருத்துவர்கள் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது.