கிருஷ்ணகிரி,

குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் யாரேனும் உலாவுகின்றனரா என்று சோதனைப் பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளனர் காவலாளர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ் மேற்பார்வையில், கிருஷ்ணகிரி மாவட்ட நக்சலைட்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் கதிர்வேல், உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் 14 பேர் கொண்ட குழுவினர் மற்றும் காவலாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலகம் அருகில் உள்ள தாளப்பள்ளி மலைப்பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் மாலை வரை மலைப்பகுதியில் சந்தேகப்படும்படி யாரேனும் உலாவுகிறார்களா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவலாளர்கள் தெரிவித்ததாவது:

“குடியரசு தின விழா வருகிற 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக மலைப்பகுதியில் யாரேனும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் உள்ளார்களா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதே போல இனி வரும் நாள்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில எல்லையில் உள்ள கும்ளாபுரம், அந்திவாடி, ஜூஜூவாடி, குருவிநாயனப்பள்ளி உள்ளிட்ட 9 சோதனைச் சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.