பிளஸ் 2 முக்கிய பாடங்களுக்கான தேர்வு இன்றுடன் நிறைவு.. ஜூன் 23 ல் தேர்வு முடிவு வெளியீடு.. தேர்வுத்துறை உறுதி.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஜூன் 23 ஆம் தேதி திட்டமிட்டப்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த, 7,534 பள்ளிகளைச் சேர்ந்த, 8.85 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், 32 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வெற்றிகரமாக நடந்து முடிந்தது பட்டினப் பிரவேசம்... தருமபுர ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா!!
இந்நிலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், பொருளியல், புள்ளியியல் உட்பட 80 சதவீதபாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
இதனால் முக்கிய பாடத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே மே 28 ஆம் தேதி தொழிற்படிப்புக்கான தேர்வுகள் மட்டும் நடைபெறவுள்ளது. இதற்கிடையே மண்டல திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜூன் 23-ல் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: சமயபுரம் மாரியம்மன் கோவில் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!