மேகதாது அணை கட்டி தமிழகத்தை பாலைவனமாக்க காங்கிரஸ் குறிகோள் கொண்டுள்ளதாகவும், திமுக அரசு இதை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதாடமல் காவிரி நீர் உரிமையை விட்டுக் கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தை பாலைவனமாக்க காங்கிரஸ் அரசு குறிக்கோள்

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை கர்நாடக அரசு அமைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது.

30 பேர் கொண்ட குழு அமைப்பு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஏனோ தானோ என்று செயல்பட்ட திமுக அரசு

தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் திமுக அரசு

திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

தமிழக மக்களுக்கு துரோகம்

இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளைபாதுகாக்க பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.