கொப்பரை தேங்காயின் ஆதார விலையை 150 ஆக உயர்த்த வேண்டும்..! ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த எடப்பாடி
தென்னை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியையும்; தேங்காய், கொப்பரை மற்றும் தென்னை நார் பொருட்களின் கடும் விலை வீழ்ச்சியால் சிரமத்தில் இருக்கும் தென்னை விவசாயிகளின் கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்றவில்லையென எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தென்னை விவசாயிகள் கோரிக்கை
தென்னை விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொள்ளாச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தேனி, நத்தம், உடுமலைப்பேட்டை போன்ற 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் தென்னை விவசாயம்தான் பிரதான தொழிலாகும். சுமார் 15 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் விவசாயிகள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இதுதவிர இளநீர் விற்பது, தேங்காய் நார் உற்பத்தி, நாற்கயிறு, பிக்கட்டி, தேங்காய் நாரில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட உபதொழில்களில் சுமார் 15 லட்சம் பேர் மறைமுகமாகவும் தென்னையை நம்பி உள்ளனர். தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னைதான் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.
கொப்பரை தேங்காய் ஆதார விலை
2011 முதல் 2021 வரை கொப்பரைக்கு வெளி மார்க்கெட் விலை ரூ. 140. எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொடர்ந்து மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 108.60 என்று உயர்த்தி நிர்ணயம் செய்தது. இதனால் அம்மாவின் அரசில் 10 ஆண்டுகளாக தென்னை விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். இன்று, வெளி மார்க்கெட்டில் கொப்பரை கிலோ ரூ. 70/-க்கும் கீழே சென்றுவிட்டது. தேங்காயின் விலையும் எட்டு ரூபாயாகக் குறைந்துள்ளது. அந்த விலையானது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து, தேங்காய் வெட்டும் கூலி, தேங்காய் உரித்தல் கூலி மற்றும் டிராக்டர் வாடகை என்று தென்னை விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு இரண்டு மடங்காகிவிட்டது என்றும், எனவே, வாக்குறுதி எண். 66-ன்படி தற்போது கொப்பரை கிலோ ஒன்றுக்கு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 108.50-லிருந்து ரூ. 150-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் விடியா திமுக அரசை வலியுறுத்தி வருகின்றனர். திமுக அரசின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் உதவியின்மையினாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றுமதி படிப்படியாகக் குறைந்து, இன்று முழுவதுமாக நின்றுவிட்டது. இதனால், மட்டை நாரை வாங்குவதற்கு யாரும் வருவதில்லை. பல கோடி மதிப்பிலான பித்பிளாக் கட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் இன்று தங்களது கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாமலும், மின் கட்டண உயர்வு போன்றவற்றாலும் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இன்று சுமார் 50 சதவீத தொழிற்சாலைகள் மட்டுமே இயங்குகின்றன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருசிலர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர். எனவே, திமுக தேர்தல் வாக்குறுதி 65-ன்படி, சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் தேங்காய் நார் பொருட்களை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நேரடியாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டம் நடத்தப்படும் இபிஎஸ் எச்சரிக்கை
பழையபடி வெளிநாட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, விடியா திமுக அரசு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றும்; ஒரு கிலோ கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலையை ரூ. 150-ஆக உயர்த்த வேண்டும் என்றும்; தென்னையை பருவ கால பயிராகக் கருதாமல், ஆண்டுக்கு ஏழு முறை குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்;
தேங்காய் எண்ணெய்யை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்றும்; தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருட்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தென்னை விவசாயிகளை ஒன்று திரட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
மேட்டுப்பாளையம் - உதகை இடையே மகாராஜா சிறப்பு மலைரயில் - பொதுமேலாளர் தகவல்