அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

ஜிஎஸ்டி வரி உயர்வு

அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தினசரி வாழ்க்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும் எனவே இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கைகயில், GST-யின் 47-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விடியா திமுக அரசின் நிதி அமைச்சரும் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் GST வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள் வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள், சாமான்ய மக்கள் உட்பட அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் அரிசி மாவு. கோதுமை மாவு, பருப்பு, பன்னீர், தேன், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள், காய்கறிகள், நாட்டுச் சர்க்கரை, பொரி, இறைச்சி உட்பட பல உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத GST வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீத GST வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பொருட்களின் விலைகள் தாருமாறாக உயரும் என்ற காரணத்தால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் குறிப்பாக தாய்மார்கள் இந்த GST வரி விதிப்பிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இந்த வரி விதிப்பினால், உணவகங்களில் அனைத்து உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்களை நம்பி இருக்கும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் மட்டுமல்ல, சிறு உணவகங்கள் நடத்தி வருபவர்களும், அதில் பணிபுரியவர்களும் இந்த வரி விதிப்பினால் ஏற்படும் தொழில் பாதிப்பை எண்ணி கவலை அடைந்துள்ளனர்.

என்ன பாத்து எப்படி சொல்லுவ.. துணிச்சல் எங்கிருந்து வந்தது..சவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றிய நீதிபதி

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது, ஒவ்வொரு முறையும் நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தில், அரசின் சார்பாக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் அவர்கள், தமிழகத்தின் சார்பாக பல அத்தியாவசியப் பொருட்களுக்கு வாதாடி வரி விலக்கு பெறப்பட்டது. இந்த விடியா அரசு பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்ற GST கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற இந்த விடியா அரசின் நிதி அமைச்சர், மக்களை பாதிக்கக்கூடிய வரி உயர்வுகளுக்கு ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் வாயில்லாப் பூச்சியாக இருந்தது ஏன்? ஆனால், திராவிட மாடல் என்று பீற்றிக் கொள்வதில் எந்தக் குறையும் இல்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி, தாங்கள் தான் வலிமையானவர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் இதன் மூலம் வெளிப்படுகிறது.

மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போடுவதா.? உங்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.. தமிழக பாஜக ஆவேசம்!

தமிழக அமைச்சர் மவுனம்

தமிழ் நாடு அரசின் சார்பில் இந்த 47-ஆவது GST கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட விடியா அரசின் நிதி அமைச்சர், உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல், மவுனம் காத்தது கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மீது இந்த விடியா அரசின் முதலமைச்சரும், திமுக-வினரும் கொண்டுள்ள அக்கறை இன்மை நன்கு வெளிப்பட்டுள்ளது.ஏழை, எளிய, நடுத்தர மக்களை குறிப்பாக, தாய்மார்களைப் பெரிதும் பாதிக்கும் உணவுப் பொருட்கள் மீதான இந்த வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று GST கவுன்சிலையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காத இந்த விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தினசரி வாழ்க்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தும் இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று GST கவுன்சிலுக்கு, விடியா திமுக அரசின் சார்பில் அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் ரெய்டு..!நாமக்கல்லில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை