தமிழகத்தில் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு சம்பவங்களைப் பட்டியலிட்டு, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை விமர்சித்துள்ளார்.
காட்டாட்சி நிர்வாகம்- விளாசும் இபிஎஸ்
தமிழகத்தில் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து எதிர்கட்சிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திராவிட' என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் 'திராவிட மாடல்' என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருவது, தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளதாக கூறியுள்ளார். ஆளும் தி.மு.க-வினருக்கு கட்சிக் கொடியின் பெயரால் லைசென்ஸ் வழங்கி உள்ளதால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களோடு, கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள்- பட்டியலிட்ட இபிஎஸ்
- கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு!
- கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே, பள்ளி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம்!
- மணப்பாறை தனியார் பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!
- வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடூரம்!
- வேலூரில், இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, ஆறு பேர் கொண்ட காமுக கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
- தமிழகக் காவல் துறையின் உயர் பதவியில் உள்ள பெண் ADGP-யே, தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என புகார்!
- கள்ளக்குறிச்சியில் பெண் VAO மீது சாணி அடித்து தாக்குதல்!
- சிவகங்கையில், காவல் நிலையத்தில் புகுந்து பெண் SI மீது தாக்குதல்!
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு வன்கொடுமை ‘யார் அந்த சார்?' உண்மையான, பின்புலம் மறைந்துள்ள குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதில், பத்திரிகையாளர், காவல் துறை என்று தடம் மாறும் விசாரணை!
- கிழக்கு கடற்கரை சாலையில், நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய காரில் துரத்தி அச்சுறுத்தியவர்கள் மற்றும் இதுகுறித்து துப்பு துலக்க வேண்டிய காவல் அதிகாரி, இரண்டு வெவ்வேறான பேட்டிகள் அளிப்பதும்; தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளி மற்றும் திமுக நிர்வாகிகளின் பேட்டிகள்! உண்மையில் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுகிறதா? அல்லது புனையப்பட்ட நாடகம் அரங்கேற்றமா? என்று ஏவல் துறைதான் விளக்க வேண்டும்!
வீடியோ கால் பேசும் கைதிகள்
- பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை, உயர் பதவியில் உள்ள பெண் காவல் அதிகாரி உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறியுள்ள தமிழகம், கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் பொம்மை முதலமைச்சரின் கைகளில் உள்ள காவல் துறை!
- கோவை மத்திய சிறையில் கைதி தனது உயிருக்கு ஆபத்து என்று வீடியோ வெளியீடு!
- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்திற்கே இன்னும் முழுமையான முடிவு எட்டப்படாத நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் கலப்பு செய்திகள் வெளிவருகின்றன!
- விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று இருமுறை கள்ளச் சாராய மரணங்கள் நடைபெற்றும், கள்ளச் சாராய விற்பனை தொடர்வது வாடிக்கையாக உள்ளது!
மன்னர் போல ஸ்டாலினின் நகர்வலம்
தொடரும் குற்றச் சம்பவங்கள் பற்றிய எனது இந்த அறிக்கைக்கும், சட்ட நடவடிக்கை எடுக்காமல், யாரையாவது விட்டு அறிக்கை வெளியிடுவார் பொம்மை முதலமைச்சர். அந்த காலத்தில் மன்னன் நகர்வலம் போவதுபோல, இந்த திராவக மாடல் ஆட்சியின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நகர்வலம் போக ஆரம்பித்துள்ளார்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என, கொதிப்படைந்துள்ள அனைத்துத் தரப்பு மக்களும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்தக் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
