கண்டெய்னரில் கட்டுக் கட்டாக கள்ளநோட்டுகள் - எண்ணூர் துறைமுகத்தில் நடப்பெதன்ன?
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கள்ள நோட்டுகள் வைக்கப்பட்டுள்ள கண்டெய்னரைத் தேடி அதிகாரிகள் நேற்று முதல் விடிய விடிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்…
எச்சரித்த உளவுத்துறை
துபாய், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடி கள்ளநோட்டுகள் கண்டெய்னர் மூலம் சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு வந்துள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
சீலிடப்பட்ட எண்ணூர் துறைமுகம்
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் நேற்று காலை 8 மணி முதல் முற்றாக சீலிடப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு, துறைமுகத்தில் இருக்கும் ஒவ்வொரு கண்டெய்னர்களையும் திறந்து சோதனை நடத்தி வருகிறது. நேற்று ஆரம்பித்த இந்தச் சோதனை விடிய விடிய நீடித்து வருகிறது.
மணலி புதுயார்டில் மர்மப் பொருள்?
சோதனையின் போது மணலி புதுயார்டில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் ஒன்றில் மர்மப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இருப்பது கள்ளநோட்டுகளாக அல்லது தங்கக் கட்டிகளா என்பது தெரியவில்லை… இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆழ்கடலில் நிறுத்தப்பட்ட கப்பல்கள்
அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து சென்னை துறைமுகத்திற்கு வந்த பல சரக்கு கப்பல்கள் நடுக்கடலில் ஆங்காங்கே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்தக் கப்பல்களிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்கான அனுமதி பெறுவதற்காக அதிகாரிகள் காத்துக் கொண்டுள்ளனராம்…
துறைமுகத்தில் எப்படி சோதனை நடக்கும்
பொதுவாக எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் அனைத்து கண்டெய்னர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தமாட்டார்களாம்… ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக 50 பெட்டிகளுக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்திலேயே சோதனை நடத்தப்படும் என்ற தகவலும் உண்டு… கடத்தல் பொருட்கள் வருவதாக தகவல் வந்தால் மட்டுமே முழு கண்டெய்னர்களும் சோதனை வளையத்திற்கு உட்படுத்தப்படுமாம்…
கடல் மார்க்கமாக கள்ள நோட்டுகள்
பொதுவாக இந்தியாவுக்குள் கடத்தல் பொருட்களை கொண்டு வர சமூகவிரோதிகள் கடல்மார்க்கத்தையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். துறைமுகத்தில் கெடுபிடி குறைவு என்பதால் இவ்வழிப் பயணத்திற்கே கடத்தல் கும்பல்கள் டிக் அடிப்பதாக கூறப்படுகிறது..
கள்ள மற்றும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த உயர்ந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சடித்து அதனை புழக்கத்தில் விட்டுள்ளது. இந்நிலையில் அதே போன்று புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.