கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம்: தடையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு...!!
கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம், அந்நிய செலாவணி மோசடி வழக்கியில் வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதாகக் .கூறி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், லுக் அவுட் சுற்றறிக்கை அறிவித்தது.
இதனை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசியல் காரணங்களுக்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இந்த மாதம் இறுதியில் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டது. இதனையேற்ற உயர்நீதிமன்றம் செப்டம்பர் மாதம்4 ஆம் தேதி வரை லுக் அவுட் நோட்டீஸ் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக கருதி, உச்சநீதிமன்றம் இன்றைய தினமே விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.