அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அசோக்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து, கரூர் புறவழிச்சாலையில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையினை தொடர்ந்து அசோக்குமாரின் மனைவிக்கும் அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பினர். அத்துடன், பங்களாவையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

சுதந்திர தினம்: ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அதன் தொடர்ச்சியாக, கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல், அவரது மனைவி, மாமியாருக்கும் 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் யாருமே ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் போலியானது எனவும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.