சென்னாக்காள் தடுப்பணை கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்...
தருமபுரி
சென்னாக்காள் தடுப்பணை திட்டத்தை கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரியில் நடந்த அனைத்துக் கட்சக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க ஒன்றியச் செயலாளர் தேசிங்குராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகி சிசுபாலன் வரவேற்றப் பேசினார். காங்கிரசு மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு கோரிக்கையை விளக்கப் பேசினார்.
இந்த கூட்டத்தில், "மழை காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் செல்லும் அதிகளவிலான தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதனைத் தடுக்கும் வகையில் சென்னாக்காள் என்னும் இடத்தில் தடுப்பணை கட்டி உபரி நீரை கால்வாய்களின் மூலம் ஏரிகளில் நிரப்பினால் எம்.வெளாம்பட்டி, மருதிப்பட்டி, கீழ்மொரப்பூர், கே.வேட்ரப்பட்டி, கொங்கவேம்பு, மோபிரிப்பட்டி, அக்ரஹாரம், செட்ரப்பட்டி, வடுகப்பட்டி, சந்தப்பட்டி ஆகிய ஊராட்சிகள் மற்றும் மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இந்த சென்னாக்காள் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது, அனைத்து கட்சி சிறப்பு மாநாடு நடத்துவது" என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் தமிழ்குமரன், சாக்கன்சர்மா, சென்னகிருஷ்ணன், வஜ்ஜிரம், ஏழுமலை, சாமிகண்ணு, சிவபிரகாசம், நேரு உள்பட ஏராளமனோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் தமிழரசன் நன்றித் தெரிவித்தார்.