நடுவழியில் நின்ற மின்சார ரயில்….இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணிப் பெண்… படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள் !!
சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் ஒன்று நடுவழியில் நின்றது. அதிலிருந்து இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணிப் பெண்ணை போலீசார் இருவர், படிக்கட்டு போல் குனிந்து நின்று தங்கள் முதுகில் மிதித்து இறங்க உதவி செய்தனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது. இதனையடுத்து பெரும்பாலான பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், அமுதா என்ற கர்ப்பிணி பெண் கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த , தனசேகரன், மணிகண்டன் ஆகிய காவலர்கள் நின்று கொண்டிருந்த ரயில் அருகே வந்தனர். பின்னர் இருவரும் ரயிலின் நுழைவு வாயிலில் ஒருவர் அருகில் மற்றொருவர் படிக்கட்டு போல குனிந்து நிற்க அவர்கள் முதுகுகளின் மேல் கால் வைத்து படிக்கட்டில் இறங்குவது போல் அமுதாவை ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர்.
இதேபோல், முதியவர்கள் கீழே இறங்கவும் இந்த காவலர்கள் உதவி செய்தனர். தனசேகரன், மணிகண்டன் என்ற இந்த இரு காவலர்களின் மனித நேயத்துக்கு ரயில் பயணிகள் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.