சென்னையில் மிக விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கின்ற வகையில், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அவற்றில் 3 ஆயிரத்து 500 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அப்போது தெரிவித்தார். 

எஞ்சிய ஆயிரத்து 500 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று கூறிய அவர், சுற்று சூழல் நலன் கருதி தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்றும் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.