Edappadi palanisamy rule continue for 40 years
அதிமுக ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும் நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல, 40 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும், என்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி போர்க் கொடி உயர்த்தி வருகின்றனர். அதே நேரத்தில் திமுகவினரும், ஓபிஎஸ் அணியினரரும் தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்றும் இந்த ஆட்சி கவிழும் என்றும் அடிக்கடி கூறிவருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஆவின் பாலகத்தில், 3.97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா, நடைபெற்றது. இதனை திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , தமிழகத்திலேயே சிறந்த பால் ஆவின் தான் என்றும். தமிழகத்தில் ஆவின், லாபத்தில் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த ஆட்சியை சிலர் குறை கூறி வருகின்றனர். குறை கூறுபவர்கள் நேரடியாக கூறட்டும். அதை விட்டு, ஆட்சி கவிழ்ந்து விடும் என்கின்றனர்.இந்த ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது; நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மட்டுமல்லாமல், அதன் பின், 40 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும். என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
