கொடுங்கையூர் தீ விபத்து விவகாரம் - காவல்துறை உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை!
கொடுங்கையூர் தீ விபத்து தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்புத்துறை டிஜிபி ஜார்ஜ், தீயணைப்புதுறை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை கொடுங்கையூர் அருகே உள்ள பேக்கரி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பணியாளர்கள் சிப்ஸ் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பக்கத்து அறையில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த, சிலிண்டர்களுக்கும் தீ பரவியதில் அவை வெடிக்கத் தொடங்கின. இதில் தீயணைப்பு வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இச்சம்பவத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் என்பவர் பலியானார். மேலும் 7 போலீசார் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தின் போது கடைக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாகின.
இதைதொடர்ந்து, தீ விபத்தில் காயமடைந்தவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மகனுக்கு அரசு வேலை மற்றும் அவரது குடும்பத்துக்கு 13லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்புத்துறை டிஜிபி ஜார்ஜ், தீயணைப்புதுறை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஆலோசனை நடத்தி வருகிறார்.