edappadi announced 10 lakhs for kalam sat

கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்த 18 வயது ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைகோளை உருவாக்கியது.

57 நாடுகளில் இருந்து சமர்பிக்கப்பட்ட 80,000 மாதிரிகளில் இந்த செயற்கைகோள் முதல் பரிசு பெற்றது.

இதைதொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி விண்ணில் கலாம் சாட் என்ற பெயரில் நாசா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட்து.

முப்பரிமாண அச்சுத்தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கலாம் சாட் செயற்கைகோள், வானிலை, வான்வெளியில் உள்ள கதிர்வேச்சு, வெப்பம் ஆகியவற்றை ஆராயும் திறன் கொண்டது.

சென்னையில் இருந்து செயல்படும் ஸ்பேஸ்கிட்ஸ் என்ற அமைப்பு மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவியது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் விதி எண் 110 ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், செயற்கைகோள் தயார்செய்த ரிஃபாத் சாருக், யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, ஆகியோருக்கு பேரவை சார்பிலும் அரசின் சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவர்கள் குழு இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளதாகவும், இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாணவர் குழுவுக்கு அரசின் சார்பில் 10 லட்சம் வழங்கப்படும் எனவும், அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.