ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்

சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகமும் உள்ளது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36,000 வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனை நம்பி அந்த நிறுவனத்தில் 1 லட்ச்த்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ் உள்பட 21 பேரை கைது செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி கைது: அதிமுக மாஜிக்களுக்கு இறுகும் பிடி? ஸ்டாலின் கணக்கு?

தொடர்ந்து அந்த நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு சொந்தமான 61 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.96 கோடி டெபாசிட், ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரூ.2438 கோடி தொடர்புடைய ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கு தொடர்பாக, 3000 பக்க குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், பாஜகவினர் பலருக்கும் தொடர்புடையதாக கூறப்படும் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.