நல்லாண்டார்கொல்லையில் தீ விபத்து எதிரொலி; மூடப்பட்டது ஓஎன்ஜிசியின் கழிவுத் தொட்டி…
புதுக்கோட்டை
நெடுவாசல் நல்லாண்டார்கொல்லையில் தீ விபத்து ஏற்பட்டதால் ஓஎன்ஜிசியின் கழிவுத் தொட்டியை வருவாய்த்துறை அதிகாரிகள் மூடினர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் நல்லாண்டார்கொல்லை, வடகாடு கல்லிக்கொல்லை, வானக்கண்காடு, கோட்டைக்காடு உள்ளிட்டப் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் இராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதனை எதிர்த்து நெடுவாசலில் ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்டப் போராட்டம் 157-வது நாளைத் தொட்டது.
இந்த நிலையில், நெடுவாசல் நல்லாண்டார்கொல்லையில் குடியிருப்பு, விளைநிலங்கள் இருக்கும் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளைச் சேகரிக்கும் தொட்டியில் வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது.
கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை திருமயம் எம்எல்ஏ எஸ்.ரகுபதி, ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.
அங்குச் சென்ற கறம்பக்குடி வட்டாட்சியர் சக்திவேல் தலைமையிலான வருவாய்த் துறையினர், லாரிகளில் மணல் கொண்டுவந்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு மண்ணை கொட்டி கழிவுத் தொட்டியை மூடினர்.