மாண்டஸ் புயல் எச்சரிக்கை.! வேகமாக நிரம்பும் ஏரிகள்.! செம்பரம்பாக்கம்,புழல், பூண்டியில் இருந்து தண்ணீர் திறப்பு
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை அதி கனமழை பெய்யக்கூடும் என மாவட்டம் முழுவதும் ஆரஞ்சு அலட் அறிவிப்பானது சென்னை வானிலை மையத்தால் கொடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவான 35 அடியில் 33 அடி உயரம் நிரம்பியுள்ளது. மேலும் ஏரிக்கு நீர் வரத்து 595 கனஅடி ஆக உள்ள நிலையில் அணையில் இருந்து 457 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் நீர் திறப்பு
பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்பொழுது 2521 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் 133 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டு அதற்காக 42 குழுக்கள் அமைக்கப்பட்டு பாதிப்புகளை தடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாண்டாஸ் புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பான பகுதிகளில் தங்கி இருக்கவும் மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே இன்று(9-12-22) செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 100 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்