சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் உள்ளூர் விடுமுறை... மதுக்கடைகளை மூட உத்தரவு!
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்துக்கு டிச.19ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அன்று மதுக்கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
வரும் டிச.19ம் தேதி சனிப்பெயர்ச்சி வருகிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார் சனிபகவான். கிரகங்களில் வலிமையான கிரகம் என்றும், தர்மாதிகாரி என்றும் தண்டனை தருபவர் என்றும் கூறப்படும் சனி பகவான் வரும் டிச. 19 ம் தேதி அன்று, விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
நவக்கிரகங்களில் கர்ம கிரகம், அதாவது தொழில் கிரகம் இந்த சனி கிரகம். வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர், சூரியனின் மகனான மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான்.
சனி பகவான், மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் குரு. நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் மூன்றுதான்! ஆயுள், தொழில், கர்மா. இந்த மூன்றுக்கும் அதிபதி சனி பகவான். அதாவது காரகன் என்பார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும் சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம்.
இவ்வளவு சிறப்பு பெற்ற சனிப் பெயர்ச்சிக்கு அன்பர்கள் வழிபடுவதற்கு அமைந்த ஆலயமாக, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் அமைந்த சனீஸ்வரர் சன்னிதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பொதுவாகவே சனிக் கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். சனி பெயர்ச்சி வருவதால், அன்றைய தினத்தில் மிக அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், நள தீர்த்தக் குளம் பகுதியிலும், கோயில் பகுதியிலும் விரிவான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும், அன்றைய தினம் காரைக்கால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளதுடன், அன்றைய தினத்தில் மதுக்கடைகளை மூடவும் புதுவை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.